ரமளான் மாதத்தின் சில சிறப்புகள்

முன்னுரை

    அரபி மாதங்கள் என அழைக்கப்படும் சந்திர மாதங்களில் 9 வது மாதம் ரமளான் மாதமாகும். இந்த ரமளான் மாதத்திற்கென்று சில சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் அம்மாதத்தின் முழுமையான பயனை அடைவதற்காக அதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.   

1. திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம்.

    ரமாளான் மாதம் மற்ற மாதங்களைப் போன்று ஒரு மாதமானாலும், ‘அம்மாதத்தில் தான் திருக்குர்ஆன் இறக்கப்பட்டது’ என்ற சிறப்பைப் பெறுகிறது.

அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்:    

 ﴿ شَهْرُ رَمَضَانَ الَّذِيْ اُنْزِلَ فِيْهِ الْقُرْاَنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ ﴾

    ‘ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழி காட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை, தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப் பெற்றது’. (அல்குர்ஆன் 2 : 185)

2. நோன்புக்குரிய மாதம்.

    உலகமகா அற்புதமான திருக்குர்ஆன் ரமளான் மாதத்தில் இறக்கப்பட்ட காரணத்திற்காக அந்த ரமளான் மாதத்தில் நோன்பு வைக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. இது அதற்குரிய மற்றொரு சிறப்பு.

அல்லாஹ் சொல்கிறான்:

 ﴿ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ﴾

    ‘ஆகவே எவர் அம்மாதத்தை அடைந்து கொள்கின்றாரோ அவர் அம்மாதம் (முழுவதும்) நோன்பு நோற்கட்டும்’. (அல்குர்ஆன் 2 : 185)

3. சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும் மாதம்.

 إِذَا جَاءَ رَمَضَانُ فُتِحَتْ اَبْوَابُ اْلجَنَّةِ

    ‘ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன’. – நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1898, முஸ்லிம் 1956)

மற்றொரு நபிமொழியில்,   

….. وَفُتِحَتْ اَبْوَابُ اْلجَنَّةِ فَلَمْ يُغْلَقْ مِنْهَا بَابٌ…

    ‘..சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன, அவற்றின் எந்த வாயிலும் மூடப்படுவதில்லை…’ நபிமொழி (அபூஹுரைரா (ரலி), திர்மிதி – 618, இப்னுமாஜா 1642)

    முஃமின்களின் ஒரே குறிக்கோள் சொர்க்கத்தை அடைவதாகும், அந்த சொர்க்கத்தின் வாசல் கதவுகள் ரமளான் மாதத்தில் தட்டாமலேயே திறக்கப்படுகின்றன.

    அந்த சொர்க்கத்தில் நுழைவதற்குறிய தகுதியை அடைவதற்கு சிறந்த மாதம் தான் ரமளான் மாதமாகும்.

    மொத்தத்தில் சொர்க்கத்தில் நுழைவதற்கு முஃமின்கள் இதன் மூலம் ஆர்வமூட்டப்படுகிறார்கள். அதாவது சொர்க்க வாசலை திறந்து வைத்து, அதில் நுழைவதற்குரிய முயற்சியில் ஈடுபடுமாறு அல்லாஹ் முஃமின்களை அழைக்கிறான். 
   

4. வானத்தின் வாயில்கள் திறக்கப்படும் மாதம்.

 إِذَا دَخَلَ شَهْرُ رَمَضَانَ فُتِحَتْ اَبْوَابُ السَمَاء …..

    ‘ரமளான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன…’ – நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1899)

    வானத்தின் வாயில்கள் இரண்டே சமயங்களில் தான் திறக்கப்படும். ஒன்று ரமளான் மாதம் மற்றொன்று கியாமத்து நாள். அல்லாஹ் சொல்கிறான்:    

 ﴿ وَّ فُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ اَبْوَابَا ﴾

    ‘வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாக ஆகும’; – (அல்குர்ஆன் 78 : 19)

    ரமளான் மாதத்தில் வானவர்களுக்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு இருக்கும், ஏனெனில் அம்மாதத்தில் அவர்களின் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.   

5. அருளின் வாயில்கள் திறக்கப்படும் மாதம்.

 إِذَا كَانَ رَمَضَانُ فُتِحَتْ اَبْوَابُ الرَحْمَةِ …..   

    ‘ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன’…. – நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1957)

    அருள் வாயில்கள் திறக்கப்பட்டு மனித சமுதாயத்திற்கு அல்லாஹ் ரமளான் மாதத்தில் மடை திறந்த வெள்ளம் போல் அபரிமிதமாக அருள் புரிகிறான். அல்லாஹ்வின் அருளினால் மட்டுமே சுவர்க்கம் செல்ல முடியும்.   

6. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படும் மாதம்.

 … وَغُلِّقَتْ اَبْوَابُ الناَّرِ …..

    ‘….நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன….’ – நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1956)

மற்றொரு நபிமொழியில்,   

 … وَغُلِّقَتْ اَبْوَابُ الناَّرِ فَلَمْ يُفْتَحْ مِنْهَا بَابٌ …..

    ‘…நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன, அவற்றின் எந்த வாயிலும் திறக்கப்படுவதில்லை…’ நபிமொழி (அபூஹுரைரா (ரலி), திர்மிதி – 618, இப்னுமாஜா 1642)

7. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்ற மாதம்.

  وَسُلْسِلَتِ الشَّيَاطِيْنُ …..

    ‘….ஷைத்தான்கள் சங்கிலியால் விலங்கிடப்படுகின்றனர்’. – நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1957)   

8. நல்லதைத் தேடுவோர் அழைக்கப்படும் மாதம்.

 …وَيُنَادِيْ مُنَادٍ يَابَاغِيَ الْخَيْرِ اَقْبِلْ وَيَابَاغِيَ الشَّرِّ اَقْصِرْ …..

    ‘…நல்லதைத் தேடுபவனே! முன்னேறிவா! தீமையைத் தேடுபவனே! (தீமையைக்) குறைத்துக் கொள்! என்று அழைப்பாளர் ஒருவர் அழைக்கிறார்…’ – நபிமொழி (அபூஹுரைரா (ரலி), திர்மிதி – 618, இப்னுமாஜா 1642)
மற்றொரு அறிவிப்பில் ‘ஒரு வானவர் அழைக்கிறார்’ என்று வந்துள்ளது.

9. நரகவாதிகள் விடுதலை அடையும் மாதம்.

 …وَلِلَّهِ عُتَقَاءُ مِنَ النَارِ وَذَلِكَ كُلُّ لَيْلَةٍ …..

    ‘…நரகத்திலிருந்து விடுவிக்கப்படுபவர்கள் பலர் உள்ளனர். (இவ்வாறு விடுவிப்பது) ஒவ்வொரு இரவிலுமாகும்…’ – நபிமொழி (அபூஹுரைரா (ரலி), திர்மிதி – 618, இப்னுமாஜா 1642)   

10. லைலத்துல் கத்ர் இரவைக் கொண்ட மாதம்.

ஆயிரம் மாதங்களை விட சிறந்த லைலத்துல் கத்ர் எனும் இரவு ரமளான் மாதத்தில் தான் இருக்கிறது.

 …تَحَرُّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي الغَسْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ

    ‘…ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புஹாரி, முஸ்லிம், திர்மிதி – 722)   

11. முன் பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்.

 …مَنْ صَامَ رَمَضَانَ وَقَامَهُ إيْمَانًا وَاحْتِسَابًا غُفِّرَ لَهُ مَاتَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

    ‘நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் ரமளானில் நோன்பு நோற்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’. (நபிமொழி) (அபூஹுரைரா (ரலி), திர்மிதி – 619)   

12. தக்வா பயிற்சிக்குரிய மாதம்.

தக்வா எனும் இறையச்சத்தை பெறுவதற்கு சிறந்த பயிற்சியளிக்கும் மாதம். அல்லாஹ் சொல்கிறான்.

 ﴿ يَأَيُّهَا الَّذِيْنَ اَمَنُوْا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ﴾

    ‘ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தோர் மீது கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது, அதன் மூலம் நீங்கள் தக்வா உடையோராகலாம்’. (அல்குர்ஆன் 2:184)    

13. அருள் செய்யப்பட்ட மாதம்.

 قَدْ جَاءَكُمْ شَهْرُ مُبَارَكٌ …..

    ‘அருள் செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது….’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: அஹ்மது, நஸயீ, பைஹக்கீ)   

முடிவுரை

மறுமையின் நிரந்தர சொர்க்கத்தை அடைந்து கொள்ள, அல்லாஹ்வின் அருள் நிறைந்த ரமளான் மாதத்தை, நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நாம் விளங்கிக் கொள்வோமாக!

அலீமக்தூம் மஹாயிமீ என்ற மகான் சிறுவராக இருந்த காலத்தில், ஒரு இரவில் அவருடைய தாயார், “மகனே! எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா,” என்றார். மஹாயிமீ தண்ணீர் கோப்பையை நன்றாகக் கழுவி, தண்ணீர் முகரச் சென்ற போது, குடத்தில் தண்ணீர் இல்லை. எனவே, ஒரு கிணற்றுக்குப் போனார். அங்கிருந்து தண்ணீர் கொண்டு வந்தார்.
     அவர் வருவதற்குள், தாயார் தூங்கி விட்டார். மஹாயிமீ விடிய விடிய அம்மாவின் அருகிலேயே தண்ணீர் கோப்பையுடன் நின்றார். காலையில் தாயார் கண்விழித்துக் கேட்டால், உடனே அவருக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பதற்காகக் காத்திருந்தார்.

 

     மறுநாள் காலை தாயார் கண் விழித்தார். தன் அருகில் மகன் தண்ணீர் கோப்பையுடன் நிற்பதைப் பார்த்தார். வியப்பு மேலிட, “மகனே! எவ்வளவு நேரம் இப்படி நிற்கிறாய்?” என்று கேட்டார்.
     “அம்மா! நேற்றிரவு தாங்கள் தண்ணீர் கேட்டீர்கள். நான் கொண்டு வருவதற்குள் உறங்கி விட்டீர்கள். விழித்தவுடன் கேட்டால் கொடுக்கலாம், தங்கள் அருகிலேயே உறங்காமல் காத்து நிற்கிறேன்,” என்றார் மஹாயிமீ.
     அந்தத்தாய் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தார். இறைவன் அதை ஏற்றுக்கொண்டான். “தாயின் காலடியிலேயே சொர்க்கம் இருக்கிறது’ என்ற நபிகள் நாயகம் அவர்களின் பொன்மொழி இன்றைய சிந்தனையாக அமையட்டும்.
மகனும், மருமகளும் ஆளுக்கொரு காரில் வேலைக்கு புறப்பட்டுச் செல்ல, கதவை தாழிட்டு உள்ளே வந்தாள் சுந்தரி.
     “என்ன சுந்தரி, இரண்டு பேரும் கிளம்பியாச்சா?” “ஆமாம்…” அலுப்புடன் சொன்னபடி, கணவரின் அருகில் உட்கார்ந்தாள். “சரி, நாமும் ஏதாவது சாப்பிட்டு… வாக்கிங் போய்ட்டு வரலாமா?”
     “என்ன பெரிசா சாப்பாடு… ஓட்ஸ், சீரியல், மப்பின், பிரெட் வகைகளைத்தான் வரிசையா வாங்கி, ப்ரிட்ஜில் உங்க மருமகள் வச்சிருக்காளே… அதை எடுத்து சாப்பிட வேண்டியதுதான்.”
    “எதுக்கு இப்படி அலுத்துக்கறே. பிரிட்ஜில் தோசை மாவு இருக்கு. தோசை ஊற்றி, இட்லி பொடி வச்சு சாப்பிட வேண்டியது தானே.”
     “எல்லாம் நம்ம நேரம்… என்னத்தைச் சொல்றது. மகன் வீட்டில் வந்து, இரண்டு மாசம் இருக்கலாம்ன்னு புறப்பட்டு வந்து, இப்படி உட்கார்ந்திருக்கோம். மருமகளுக்கு நம்ப மேலே, கொஞ்சம் கூட அக்கறை கிடையாது. அவங்களை பார்க்க, அவங்களோடு இருக்கத்தானே வந்திருக்கோம்ன்னு, கொஞ்சமாவது அக்கறை எடுத்து, ஏதாவது செய்யறாளா?
     ஏதோ மூணாம் மனுஷங்க வந்த மாதிரி நடந்துக்கறா. காலையில் ரெக்கை கட்டிக்கிட்டு, ஆபீசுக்குக் கிளம்பறா. “ப்ரிட்ஜில் எல்லாம் இருக்கு. எடுத்துக்குங்க…’ன்னு சொல்லியதோட, அவ வேலை முடிஞ்சது. மத்தியான சமையலை, நானே செய்ய வேண்டியிருக்கு. ராத்திரியில் மிச்சம் இருக்கிறதை சாப்பிட்டுட்டு, படுக்கப் போயிடறா. இதெல்லாம் நல்லாவா இருக்கு!”
     “என்ன சுந்தரி, இதையெல்லாம் தப்பா எடுத்துக்க முடியுமா? ஏதோ, அவங்களால முடிஞ்சதை செய்யத்தானே செய்யறாங்க. நேத்து ராத்திரி கூட, வெஜிடபிள் பீசா, சிக்கன் பீசான்னு, வரும்போது, வகைவகையா வாங்கிட்டு வந்தாளே… அப்புறம் என்ன?”
     “புரியாமப்பேசாதீங்க. நீங்க இன்னும் உங்க மருமகளை சரியா புரிஞ்சுக்கலை. பையனைப்பெத்து, ஆளாக்கி, அவகிட்டே தாரை வார்த்துட்டோம். நல்ல சுகபோகமாக, அதுவும், அமெரிக்காவில் மகாராணி போல வாழறா. இந்த வாழ்வு, யாரால வந்ததுன்னு, நினைச்சு பார்க்கக்கூட அவளுக்கு நேரமில்லை. உட்கார்ந்து அன்பா, ஆசையா, ஒரு வார்த்தை பேசறது கிடையாது. எனக்கு நரகத்தில் இருக்கிற மாதிரி இருக்கு. எப்படா இரண்டு மாசம் முடியும், கிளம்புவோம்ன்னு இருக்கு.”
     “உனக்கு சொல்லிப் புரிய வைக்க முடியாது. உன் குணம் அப்படி. சரி, ஓட்ஸ் போட்டு குடிச்சுட்டு, வாக்கிங் போய்ட்டு வருவோம். மனசுக்கும், உடம்புக்கும் இதமா இருக்கும். நான் கிளம்பி ரெடியாகுறேன்,” எழுந்து உள்ளே சென்றார் சண்முகம்.
     அடுக்கி வைத்தாற் போல், ஒரே மாதிரி காட்சி தரும் வீடுகள், அகலமான தெருக்கள். நடந்து செல்பவர்களுக்காக, இருபுறமும் தனியாக போடப்பட்டிருக்கும் நடைபாதைகள். கண்ணுக்கு குளுமையாக, எங்கும் பச்சை பசேலென காட்சி தரும் புல்வெளிகள். அழகழகு கலர்களில் பூத்துக் குலுங்கும் மரங்களின் அணிவகுப்புகள். அவற்றையெல்லாம் ரசித்துப் பார்த்தபடி, குளிர்காற்று வீச, கைகளை கோட் பாக்கெட்டில் நுழைத்து, மனைவி பின் தொடர நடந்தார் சண்முகம்.
     “சுந்தரி, இங்கே எல்லாம் ஒரு கட்டுப்பாடு, ஒழுங்கோடு இருக்கு பார்த்தியா. நம்ம ஊரில், இப்படி காலார நடக்க முடியுமா. பஸ், காருக்கு வழிவிட்டு, தெருவில் ஒதுங்க இடமில்லாமல், பார்க்குக்குப் போறதுக்குள்ளே, அந்த பத்து நிமிஷ நடையில், நாம் எவ்வளவு சிரமப்படுவோம்…”
     “ம்… இது ஒண்ணுதான் நாம் இங்கே கண்ட பலன். நிம்மதியா ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் நடந்துட்டு வர்றோம்.” “ஏன் இப்படி சொல்றே… போன வாரம் சனி, ஞாயிறு உன் மருமகள், சிகாகோ கூட்டிட்டுப் போனாள். எல்லா இடமும் சுத்திப் பார்த்துட்டு வந்தது எவ்வளவு நல்லா இருந்துச்சு.”
     “ஆமாம்… மாமனார், மாமியார் அமெரிக்கா வந்தாங்க. எங்கேயும் கூட்டிட்டுப் போய் சுத்திக் காட்டலைன்னு, நாளைக்கு நாலு பேர் சொல்லக் கூடாதுன்னு அழைச்சுட்டுப் போனாங்க. அவ்வளவும் விரும்பியா செய்யறாங்க.”
     “உனக்கு எந்த விஷயமும் புரிய வைக்க முடியாது. நீ என்ன முடிவு பண்ணினியோ அதுதான் சரின்னு பேசுவே.” சிறுசிறு தூரலாக மழை விழ ஆரம்பிக்க, “என்னங்க மழை வருதே… வீட்டை விட்டு இவ்வளவு தூரம் வந்துட்டோம். மழையில் நனைஞ்சிடுவோம் போலிருக்கே.”
     “காலையிலிருந்தே காற்று சில்லுன்னு அடிச்சது… “வெதர் டெலிகாஸ்டில் இன்னைக்கு மழை இருக்கும்ன்னு சொல்லியிருக்காங்க. வெளியே போக வேண்டாம்…’ன்னு பையன் சொல்லிட்டு போனான். நான்தான்… மறந்துட்டு கிளம்பிட்டேன்.”
     “இப்ப என்னங்க செய்றது. பக்கத்தில் ஒதுங்கக்கூட இடமில்லை. வரிசையாக வீடுகள். எல்லாமே கதவு மூடியிருக்கு. வீட்டு வாசலில் போய் நின்னாதான், மத்தபடி நிக்க இடமில்லை.” “சரி… பரவாயில்லை. அந்த வீட்டின் முன்னால ஒதுங்க இடமிருக்கு. கொஞ்ச நேரம், அங்கே நிற்போம். மழை குறைஞ்சதும், வீட்டுக்குப் போகலாம்.” சொன்னவர், சுந்தரியுடன் அந்த வீட்டின் கதவருகே, மழையில் நனையாமல் ஒன்றியபடி நின்றார்.
     “என்னங்க, குளிர் அடிக்குது. நானும், ஓவர்கோட் போடாம வெறும் ஸ்வெட்டர் மட்டும் மாட்டிக்கிட்டு வந்துட்டேன். இந்த சாரலில் நிக்க முடியலைங்க.” குளிரில் நடுங்கினாள் சுந்தரி.
     அவர்கள் நின்ற வீட்டின் கதவு திறக்கப்பட, இருவரும் திரும்பிப் பார்த்தனர். கதவருகில் நின்ற பெண், அவர்களை பார்த்தாள். பார்த்தால் இந்தியப் பெண் போல் தெரிய, “”நாங்க இங்கே பக்கத்தில் இருக்கிறோம். நடைப்பயிற்சி வரும்போது, மழை வந்ததால், கொஞ்சநேரம் நின்னுட்டு போகலாம்ன்னு… உங்களுக்கு ஒண்ணும் தொந்தரவில்லையே…”
     சண்முகம் ஆங்கிலத்தில் சொல்ல, “நீங்க தமிழகத்தைச் சேர்ந்தவங்களா, உள்ளே வாங்க,” புன்னகையுடன் அவள் தமிழில் பேச, முகம் மலர்ந்தாள் சுந்தரி. அமெரிக்கா வந்து, நம் நாட்டு மனுஷங்களைப் பார்க்கும் போது, எவ்வளவு சந்தோஷமா இருக்கு. “நீயும் தமிழகத்தை சேர்ந்தவளாம்மா.”
     “ஆமாம்… சேலம். நீங்க மழையில் நனையாம, முதலில் உள்ளே வந்து உட்காருங்க.” அவர்களை வரவேற்று ஹாலில் உட்கார வைத்தாள். “நான் சென்னையில் கன்ஸ்ட்ரக்ஷன் இன்ஜினியராக இருக்கேன். இரண்டு மாதம், மகன் வீட்டில் இருக்கலாம்ன்னு வந்திருக்கோம்.”
     “அப்படியா… ரொம்ப சந்தோஷம். என்ன சாப்பிடறீங்க. மழைக்கு சூடா காபி எடுத்துட்டு வர்றேன்.” “அதெல்லாம் வேண்டாம்மா. நீ இவ்வளவு தூரம் உபசரிப்பதே பெரிய விஷயம். மழை விட்டதும் நாங்க கிளம்பறோம்.”
     அதற்குள் உள்ளிருந்து இருமல் சப்தம் கேட்க, “ஒரு நிமிஷம்… உடல் நலமில்லாத என் மாமியார் இருக்காங்க. அவங்களுக்கு மருந்து கொடுத்துட்டு வர்றேன்.” வேகமாக உள்ளே சென்றாள். உள்ளே வயதான பெண் மணியோடு, அவள் ஆங்கிலத்தில் உரையாடுவது, அவர்கள் காதில் விழுந்தது. சற்று நேரத்தில் கையில் காபி கப்புடன் வந்தாள்.
“எடுத்துக்குங்க.”
     “உனக்கெதுக்கும்மா சிரமம்…” புன்னகையுடன் இருவரும் வாங்கிக் கொள்ள, அந்தப் பெண்ணைப் பார்த்தாள் சுந்தரி.
     “உன் மாமியாருக்கு உடம்பு சரியில்லையா?” “ஆமாம்… ஒரு வாரமாக பீவர். நல்லா சுறுசுறுப்பா இருப்பாங்க. அவங்களுக்காகத்தான் ஒரு வாரம் வேலைக்கு லீவ் போட்டுட்டு வீட்டில் இருக்கேன்.”
“ஊரிலிருந்து வந்திருக்காங்களா?”
     “இல்லம்மா… அவங்க இங்கேதான் இருக்காங்க. இந்த நாட்டைச் சேர்ந்தவங்க. எனக்கு பெத்தவங்க இல்லை. ஒரு காப்பகத்தில் வளர்ந்தேன். மேல்படிப்புக்கு அமெரிக்கா வந்து, இங்கேயே வேலை கிடைச்சு, என்னோட வேலை பார்த்த அமெரிக்கரை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எனக்கு நாலு நாத்தனார்கள்.
     எல்லாரும் கூட்டுக் குடும்பமாக ஒண்ணா இருக்கோம். தாய், தந்தை யாருன்னு தெரியாம, தனி மனுஷியாக வளர்ந்த எனக்கு, என் கணவரோட சொந்தங்களை, என் உறவுகளாக நினைச்சு வாழ்ந்துட்டிருக்கேன். என்னவோ தெரியலை. உங்களை என் பெத்தவங்களாக நினைச்சு சொல்லணும்ன்னு தோணிச்சு… அதான் சொல்றேன்.”
     “நீ சொன்னதைக் கேட்க சந்தோஷமா இருக்கு. நீ இதே நிறைவுடன் நல்லபடியா வாழணும்,” மனதார வாழ்த்தினார் சண்முகம். சுந்தரி மனதில், தன் மருமகளை நினைத்து கோபம் வந்தது. “எவ்வளவு நல்ல குணம் இவளுக்கு…’ என்று மனதில் நினைத்தாள்.
     “என்னம்மா, எப்படி என்னால இவ்வளவு பெரிய குடும்பத்தில், ஒற்றுமையா, சந்தோஷமா இருக்க முடியுதுன்னு பார்க்கிறீங்களா? அன்பு பாசங்கறது, நம் மனசில் இருந்து வர்றது. அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் மாதிரி. அதை நான் புரிஞ்சு வச்சிருக்கேன். வஞ்சனையில்லாம அவங்ககிட்டே அதை கொடுக்கிறேன். அது அப்படியே எனக்குத் திரும்பக் கிடைக்குது.
     “என் மாமியார் என்ன சொல்வாங்க தெரியுமா, “உன்னோட அன்பான உபசரிப்பு, கணவர் குடும்பத்தை, உன் உறவுகளாக உண்மையான அன்போடு நேசிக்கிற பாங்கு, இதெல்லாம், இந்திய வம்சாவழியில் வந்ததால், உன்கிட்டே அதிகளவில் இருப்பதை என்னால புரிஞ்சுக்க முடியுது.
     எங்கள் இனப்பெண் மருகளாய் வந்திருந்தால் கூட, இந்த அளவு எங்கள் குடும்பத்தில் ஈடுபாட்டோடு இருந்திருக்க மாட்டாள். மனசு விட்டுச் சொல்றேன். அடுத்த ஜென்மம்ன்னு ஒண்ணு இருந்தால், நான் ஒரு இந்திய தாய்க்கு மகளாகப் பிறக்கணும். உங்க பண்பாடு, கலாசாரத்தோடு, அன்பான இந்தியக் குடும்பத்தில் வாழணும்ன்னு ஆசைப்படறேன்…’ன்னு சொல்வாங்க.” மழை நிற்க, அவளிடம் விடைபெற்று, வீடு நோக்கி நடந்தனர்.
      “வீட்டுக்குப் போய் கார முறுக்கு செய்யணும். லதா நேற்று இந்திய கடையில் வச்சிருந்த முறுக்கை பார்த்துட்டு, மதன்கிட்டே, “எனக்கு முறுக்கு ரொம்பப் பிடிக்கும். நாலு முறுக்கு வச்சுக்கிட்டு, ஐந்து டாலர் போட்டிருக்கான்…’ன்னு சொல்லிட்டிருந்தா. வீட்டிலே எல்லா சாமானும் இருக்கு. அவங்க ரெண்டு பேரும், ஆபீஸ் விட்டு வர்றதுக்குள் செய்துடணும். லதா பார்த்தா சந்தோஷப்படுவா.” மனைவியை ஆச்சரியத்துடன் பார்த்தார்.
     “ஆமாங்க. தாய், தகப்பன் யாருன்னு தெரியாம வளர்ந்து, இன்னைக்கு அன்னிய நாட்டிற்கு மருமகளாக வந்து, அந்தக் குடும்பத்தோடு எவ்வளவு சந்தோஷமாக வாழ்ந்துட்டிருக்கா. அவளோட அன்பான அணுகுமுறையும், பாசமும்தானே அவங்க மாமியாரை, நம் தேசத்தை நேசிக்க வச்சுது. தானும் ஒரு இந்தியப் பெண்ணாகப் பிறக்கணும்ன்னு ஆசைப்படறாங்க.
     ஆனா, நான் ஒரு இந்தியத் தாயாக இருந்தும், கடல் கடந்து இருக்கிற பிள்ளைகளை பார்க்க வந்திருக்கேன்னு, கொஞ்சமும் நினைக்காம, மனசு பூரா வெறுப்பை சுமந்துக்கிட்டு, என் மருமகளை, ஒரு அன்னிய மனுஷியா பார்த்துட்டு இருக்கேன்.
     என்னை நினைச்சு நானே வெட்கப்படறேன். என் மகன், மருமகளோடு இருக்கிற, இந்த கொஞ்ச நாட்களும், அவங்க மனசு சந்தோஷப்படற மாதிரி இருந்துட்டு போகணும்ன்னு நினைக்கிறேன். இனி எவ்வளவு நாள் கழிச்சு, நாம் ஒண்ணு சேரப்போறோம்ன்னு தெரியாது,” என்றாள்.
     தேவையில்லாம, மனதில் இவ்வளவு நாட்களும் இருந்த பகைமை மறந்து, உண்மையான அன்போடும், பாசத்தோடும் பேசும் மனைவியைப் பார்த்தார். மழையை வரவழைத்து, தன் மனைவியின் மனதை மாற்றிய வருண பகவானுக்கு, அவர் மனம் நன்றி சொன்னது.

Check Baby Male/FeMale

Posted: August 8, 2012 in Entertainment, Nigazhvu

பாகற்காய் பிரட்டல்

Bittergourd+tawa+fry.jpg

தேவையானப்பொருடகள்:

பாகற்காய் – 2 அல்லது 3
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி பொடி – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
புளி – ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
வெல்லம் தூள் – 1 தேக்கரண்டி
எண்ணை – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – 1/2 தேக்கரண்டி அல்லது சுவை படி

செய்முறை:

புளியை சிறிது நீரில் ஊறவைத்து கரைத்து புளிச்சாற்றை எடுக்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் புளிச்சாறு தேவை.

பாகற்காயை கழுவி, முனையை நீக்கி விட்டு, மெல்லிய வில்லைகளாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய வில்லைகளை கொதிக்கும் நீரில் ஓரிரு நிமிடங்கள் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எடுக்கவும். எடுத்து, ஒரு தட்டில் போடவும். அத்துடன் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் பொடி, புளிச்சாறு, வெல்லம், உப்பு போட்டு பிசறி 10 நிமிடங்கள் ஊற விடவும்.

ஒரு தோசைக்கல் அல்லது அகலமான தாவாவை அடுப்பிலேற்றி சிறிது எண்ணை தடவி சூடாக்கவும். அதில் பாகற்காய் வில்லைகளை தனித்தனியாக எடுத்து பரப்பி, அதன் மேலே ஓரிரு டீஸ்பூன் எண்ணை ஊற்றி வேக விடவும். ஒரு புறம் நன்றாக சிவந்ததும், எல்லா வில்லைகளையும் ஒவ்வொன்றாகத் திருப்பிப் போட்டு மறு பக்கமும் சிவக்க வேக விடவும். இரு பக்கமும் நன்றாக சிவக்கும் வரை வேக விட்டு எடுக்கவும்.

முருங்கைக்கீரை பொரிச்சகுழம்பு

drumstick+leaves+poricha+kuzhambu.jpg

தேவையானப்பொருட்கள்:

முருங்கைக்கீரை – ஒரு கட்டு
பயத்தம் பருப்பு – 1/2 கப்
சாம்பார் பொடி – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

வறுத்து அரைக்க:

காய்ந்த மிளகாய் – 2
தனியா – 1 டேபிள்ஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

எண்ணை – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
சாம்பார் வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)

செய்முறை:

முருங்கைக்கீரையை உருவி, அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பயத்தம் பருப்பை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து மலர வேக வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிவக்க வறுத்து, ஆறியவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.

முருங்கைக்கீரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிறிது தண்ணீரைச் சேர்த்து, 3 அல்லது 4 நிமிடங்கள் வேக விடவும். பின்னர் அதில் வேக வைத்துள்ள பருப்பைச் சேர்த்து, ஒரு கொதி வரும் வரை வேக விடவும். ஒரு கொதி வந்ததும், அரைத்து வைத்துள்ள மசாலா விழுதைச் சேர்த்துக் கிளறி விடவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீரையும் சேர்த்துக் கிளறி மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.

குழம்பு நன்றாகக் கொதித்ததும், தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்துக் கொட்டி, இறக்கி வைக்கவும்.

சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

உருளைக்கிழங்கு பக்கோடா

Potato+Pakoda.JPG

தேவையானப்பொருட்கள்:

கடலை மாவு – 1 கப்
உருளைக்கிழங்கு (நடுத்தர அளவு) – 1
வெங்காயம் (நடுத்தர அளவு) – 1
மாதுளை முத்துக்கள் – 1/2 கப்
பச்சை மிளகாய் – 1 அல்லது 2
கொத்துமல்லி, கறிவேப்பிலை – சிறிது
மிளகு – 1 டீஸ்பூன்
உப்பு – 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை கழுவி விட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். (தோலை நீக்க தேவையில்லை). வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகை சற்று கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

வாயகன்ற ஒரு பாத்திரத்தில் கடலை மாவைப் போட்டு அத்துடன் நறுக்கி வைத்துள்ள அனைத்தையும் சேர்க்கவும். மாதுளம் முத்துக்கள், உப்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் அதில் சிறிது சிறிதாக தண்ணீரைத் தெளித்து கெட்டியாக பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடாகவும். எண்ணை காய்ந்ததும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, மாவை சிறிது சிறிதாகக் கிள்ளிப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

.தக்காளி சாஸ் அல்லது கெச்சப்புடன் பரிமாறவும்.

இதை "பக்கோடா குருமா", "மோர் குழம்பு" ஆகியவற்றில் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

கவனிக்க: இதை பொரிக்கும் பொழுது, அடுப்பிலிருந்து சற்று தள்ளி நிற்கவும். ஏனெனில், மாதுளம் முத்துக்கள் இலேசாக வெடிக்க வாய்ப்புள்ளது. இது ஆறினால் சற்று நமத்துப் போகும். எனவே சூடாக பரிமாறவும்.

Burfi.jpg

தேவையானப்பொருட்கள்:

சத்து மாவு – 2 கப்
பால் பவுடர் – 1 கப்
சர்க்கரை – 1 – 1/2 கப்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

ஓரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, அதில் சத்து மாவைப் போட்டு மிதமான தீயில் 2 அல்லது 3 நிமிடங்கள் வரை வறுத்தெடுத்து தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். அத்துடன் பால் பவுடரைச் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.

வாணலியில் சர்க்கரையைப்போட்டு அத்துடன் அரைக்கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரைக் கொதித்து மேலே குமிழ் வரத்தொடங்கியதும், அடுப்பை தணித்து சிறு தீயில் வைத்து, மாவைக் கொட்டிக் கிளறவும். மாவு கெட்டியாக ஆரம்பித்ததும் மீதமுள்ள நெய்யை விட்டுக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, சற்று ஆறியதும் வில்லைகளாக வெட்டி எடுக்கவும்.

குறிப்பு: நான் "மன்னா சத்து மாவு" உபயோகித்து இதை செய்தேன். அதிலேயே ஏலக்காய் சேர்த்திருப்பதால், நான் தனியாக வாசனை எதுவும் சேர்க்கவில்லை. விருப்பப்பட்டால் மேலும் சிறிது ஏலக்காய் தூள் அல்லது வெனிலா எஸ்ஸென்ஸ் சேர்க்கலாம். முந்திரி, பிஸ்தா போன்றவற்றையும் சேர்க்கலாம்.

கறிவேப்பிலை எள்ளுப் பொடி

podi.jpg

தேவையானப்பொருட்கள்:

வெள்ளை எள் – 1 கப்
கறிவேப்பிலை – 1/2 கப்
கடலைப்பருப்பு – 1/2 கப்
பெருங்காயம் – ஒரு சிறு துண்டு
காய்ந்த மிளகாய் – 5 முதல் 6 வரை
உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

வெறும் வாணலியில் எள்ளைப் போட்டு சற்று சிவக்க வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் கடலைப்பருப்பு, பெருங்காயம், மிளகாய் ஆகியவற்றைத் தனித்தனியாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். கடைசியில் கறிவேப்பிலையைப் போட்டு ஓரிரு வினாடிகள் வதக்கி எடுத்து ஆற விடவும். பின்னர் எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு, அத்துடன் உப்பையும் சேர்த்து பொடித்தெடுக்கவும்.

இதை இட்லி/தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். காய்கறி பொரியல் செய்யும் பொழுது, கடைசியில் ஒரு டீஸ்பூன் இந்தப் பொடியைத் தூவி எடுத்தால் சுவையாக இருக்கும்.

உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் புளிக்கறி

Potato+Puzhi+Varuval.jpg

தேவையானப்பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 2
கத்திரிக்காய் – 2
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
புளி – ஒரு நெல்லிக்காயளவு
உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

எண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – இரண்டு சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது
வெங்காயம் பொடியாக நறுக்கியது – 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை

செய்முறை:

புளியை 1/4 கப் தண்ணீரில் ஊற வைத்து கெட்டியாக புளித்தண்ணீரை எடுத்து வைக்கவும். புளித்தண்ணீர் 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் வரை தேவை.

உருளைக்கிழங்கை நன்றாகக் கழுவி விட்டு, தோலை சீவி, ஒரு அங்குலத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். கத்திரிக்காயையும் அதே அளவிற்கு வெட்டிக் கொள்ளவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் உருளை, கத்திரி துண்டுகளைப் போடவும். அத்துடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் உப்பு, புளித்தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து பிசறி 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற விடவும்.

ஒரு வாணலியை அடுப்பிலேற்றி எண்ணை விடவும். எண்ணை காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் சேர்த்து சிவக்க வறுக்கவும். பின்னர் வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும் கடைசியில் ஊற வைத்துள்ள உருளை, கத்திரிக்காயைச் சேர்த்துக் கிளறி விடவும். அரைக் கப் தண்ணீரை சேர்த்து மீண்ரும் நன்றாகக் கிளறி விடவும். மூடி போட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து வேக விடவும். அவ்வப்பொழுது கிளறி விட்டு, உருளைக்கிழங்கு வேகும் வரை அடுப்பில் வைத்திருந்து, இறக்கி வைக்கவும்.

சாதம், சப்பாத்தி இரண்டிற்குமே தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.